மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் பஞ்சாலை செயல்பட்டு வந்த இடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை லாரிகளில் அள்ளிச் செல்லும் நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை காவலர்கள் தடுத்து நிறுத்தி மணலை அள்ளக்கூடாது என அறிவுறுத்தினர்.
மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் தனியார் பஞ்சாலை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், ஆலை வளாகத்துக்குள் அதிகளவில் ஆற்று மணல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த மணலை தனிநபர் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று லாரிகளில் கொண்டுச் சென்றார்.
இது குறித்து தகவல் கிடைத்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் உத்தரவின்பேரில் மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம், ஆய்வாளர் சேது ஆகியோர் ராஜகம்பீரம் ஆலை இருந்த வளாகத்துக்குள் சென்று மணல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
அதன்பின் லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்தி இனிமேல் மணலை அள்ளிச் செல்லக்கூடாது என அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இடத்திலிருந்து ஆற்று மணல் அள்ளிச் செல்லப்படுவது நிறுத்தப்பட்டது.