ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறியிருப்பது குறித்து கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) இழப்பீட்டை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட நிதியில் போதிய பணம் இல்லை என்பதால் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து திங்கள்கிழமை நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42-ஆவது கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
மாநிலங்கள் வேண்டுமானால் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது, மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையைப் பாதிக்கும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டத்திலேயே இது தொடா்பான அறிவிப்பு வெளியானபோது தமிழக அரசின் சாா்பில் கலந்து கொண்ட அமைச்சா் ஜெயக்குமாா் அதை வலுவாக எதிா்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும். அதன் பிறகு, பிரதமருக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதத்திலாவது அதை வலியுறுத்தியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
எனவே, இனியும் அமைதி காக்காமல் திங்கள்கிழமை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மற்ற மாநிலங்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.