பாலியல் படுகொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை ஆணையத்தின் அனுமதிக்கு பிறகே அடக்கம் செய்ய வேண்டும் மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் பெண்களின் உடல் தேசிய மகளிர் ஆணையம் அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அனுமதி இன்றி அடக்கமோ, எரியூட்டுதலோ செய்யப்படக்கூடாது என சட்டம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிசங்கர், நகரச் செயலாளர் ச.அகோரம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.என்.செந்தில், சிராஜூதீன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நகர இளைஞரணி செயலாளர் விவேக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிரணி தலைவர் சுஜாதா வரவேற்றார். இக்கூட்டத்தில், திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலாளர் கே.அருண் சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்துக்குப் பாடுபட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, சாலை செப்பனிடும்போது, உயரத்தை அதிகரிக்காமல் செப்பனிடும் முறைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அதனைச் சாத்தியப்படுத்திய மயிலாடுதுறை வர்த்தக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, நீட் தேர்வு முறையைக் கைவிடக்
கோருவது,
பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல் தேசிய மகளிர் ஆணையம் அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுமதி இன்றி அடக்கமோ, எரியூட்டுதலோ செய்யப்படக்கூடாது என சட்டம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, மனித கழிவுகளை மனிதனே அகற்ற தடைச்சட்டம் இருந்தும் அப்பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் மயிலாடுதுறை நகராட்சியைக் கண்டிப்பது, தலைஞாயிறு சர்க்கரை ஆலையைத் திறக்க வலியுறுத்துவது, மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட மருத்துவக் கல்லூரி உருவாக்கத்திற்கான ஆணை பிறப்பிக்க தமிழக அரசை வலியுறுத்துவது ஆகிய 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், உமாசங்கர், அன்பு, சிவா, நித்தின்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், சீர்காழி நகரச் செயலாளர் சந்துரு நன்றி தெரிவித்தார்.