திருப்பூர்: திருப்பூரில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர், ரயில் நிலையம் முன்பாக வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் செ.குப்புசாமி தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டியில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 12 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த வழக்கை மாநில அரசு சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் மாவட்டத் தலைவர் ரேஞ்சர் மணி, மாவட்ட அவைத்தலைவர் டி.வேலுசாமி, மாவட்டச் செயலாளர் என்.ராஜாகோபால் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.