இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு வழங்கப்படும் நூலை ஏன் தர சோதனை செய்வதில்லை? - நீதிமன்றம் கேள்வி

இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு வழங்கப்படும் நூலை ஏன் தர சோதனை செய்வதில்லை?  என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

சென்னை: அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்காக கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகளை தர சோதனை செய்யும்போது, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலை ஏன் தர சோதனை செய்வது இல்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டம் முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் இலவச வேட்டி சேலைத் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 250 கோடிக்கு நூல் வாங்கப்படுகிறது.

நெசவாளர்களுக்கு தரமற்ற நூல் வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி, சேலையை உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் நெசவாளர்களும் பயனாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசின் இலவச வேட்டி சேலைத் திட்டத்துக்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்க, நூலின் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய  உயர்மட்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி சேலைகளை தர சோதனை செய்யும் போது, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலை ஏன் தர சோதனை செய்வது இல்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் மனு தொடர்பாக தமிழக அரசின் கைத்தறித் துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com