தருமபுரி: ஊராட்சி செயலரை நியமிக்கக் கோரி, முக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முக்குளம் ஊராட்சியில் செயலராக பணியாற்றியவர் சரவணன். இவர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து முக்குளம் ஊராட்சிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்படாததால் ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த 10 நாள்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அலுவலக வேலை பாதிப்பதாக கூறி, புதிய செயலரை நியமிக்க வலியுறுத்தியும் பூட்டிய நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி, ஊராட்சி மன்றத் தலைவர் காஞ்சனா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் காஞ்சனாவிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதில், புதிய செயலரை நியமிக்க மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, சமாதானம் அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.