டிராக்டர் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தில் டிராக்டர் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.

100 நாள் வேலைத் திட்டத்தில் டிராக்டர் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ. லாசர் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எம். சின்னதுரை ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், திம்மூர் கிராமத்தில் 100 நாள் வேலையின்போது டிராக்டர் மோதி உயிரிழந்த ஜெயலட்சுமி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது கணவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். இரு குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்.

இத்திட்டத்தில் சட்ட விரோதமாக இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இயந்திரத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஊராட்சி செயலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். முழுமையாக நீதி கிடைக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

நாள்தோறும் வேலை வழங்க ரூ. 200, பணிக்கான அட்டை பெறுவதற்கு ரூ. 500 லஞ்சம் பெற்றதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உயிரிழந்த ஜெயலட்சுமி குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில பொதுச் செயலர் வி. அமிர்தலிங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

இதில், அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, பல்வேறு கட்சி நிர்வாகிகள் வீர. செங்கோலன், ஏ. அகஸ்டின், ஏ. கலையரசி, எம். மணிவேல், எம். பிரபாகரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுத்ததால் பேருந்து நிலைய வளாகத்தில் தர்ணா மற்றும் போராட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com