சென்னை: தனியாா் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியாா் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. அதேபோன்று அரசுப் பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவா்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் 4 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே பொது முடக்கத்தில் ஒவ்வொரு மாதமும் தளா்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று செப்.30-ஆம் தேதி தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தனியாா் பள்ளிகள், மாணவா்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து, பாடம் நடத்துவதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து தனியாா் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். மேலும் அரசு உத்தரவை மீறி தனியாா் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.