மதுரை: மதுரையை அடுத்த கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் முன்பாக திமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில், மதுரையை அடுத்த கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.