கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேல் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா். அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் வெண்டிலேட்டா் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை மாலை காலமானார்.
இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ வெற்றிவேலின் மறைவு செய்தியால் மிகுந்த வேதனையையும் சொல்லமுடியாத துயரமும் தொண்டையை அடைக்கிறது. அவரின் மறைவு கட்சிக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தாருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.