சேலம்: சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது. இது தொடர்பாக சார்பதிவாளர் உள்பட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் சென்று கண்காணித்தனர்.
அப்போது, அலுவலகத்தில் சில அதிகாரிகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பத்திர பதிவு செய்த ஆவணங்கள் இடையில் கட்டு கட்டாக பணம் இருந்தது. கணக்கில் வராத பணம். கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 53 ஆயிரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர் .
இன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது சோதனையை முடித்துக் கொண்டு சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகம் சென்று தொடர் விசாரணை செய்கின்றனர்.