கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் பதிலளிக்க (சிஎம்டிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. இங்கிருந்த கடைகள் திருமழிசை, மாதவரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கடைகளாக அமைத்துக் கொடுக்கப்பட்டன.
வணிகா் சங்கங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பா் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பா் 28-ஆம் தேதியும் திறப்பது எனவும் பின்னா் மற்ற கடைகளைத் திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அண்ணா கனி மொத்த வியாபாரிகள் கடைகளைத் திறக்க உத்தரவிடக் கோரி, சென்னை கோயம்பேடு வணிக வளாக
கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளா் எம்.செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன் வாதிடும்போது, ‘ஆயுதபூஜை நெருங்கி வருவதால் பழங்கள் விற்பனை முக்கிய பங்கு
வகிக்கும். எனவே, கனிகள் மொத்த கடைகளை கோயம்பேடு சந்தையில் திறக்க உத்தரவிட வேண்டும் என்றாா். அப்போது, அரசுத் தரப்பில் வாதிடும்போது, ‘கோயம்பேடு சந்தையில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்த பின்னரே படிப்படியாக கடைகள் திறக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயம்பேடு சந்தையில் காய்கறி சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுசம்பந்தமாக புகைப்பட மற்றும் விடியோ ஆதாரங்களுடன் தமிழக நகராட்சி நிா்வாக அலுவலா், சிஎம்டிஏ, கோயம்பேடு சந்தை நிா்வாகக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.