அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மின்கம்பத்தை விரைவில் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
செட்டிக்குறிச்சி கிராமத்தினுள் நுழையும் பகுதியில் ஊருணி ஒன்று அமைந்துள்ளது. இவ்வூருணியை ஒட்டி அதிக எண்ணிக்கையில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியருகே கிராமத்தினுள் செல்லும் சாலையோரம் மின்கம்பம் ஒன்று 45 டிகிரிக்குமேல் சாய்ந்த நிலையில் உள்ளது.
இதனையடுத்துள்ள மின்கம்பத்தின் துணையுடன்தான் சாய்ந்த மின்கம்பம் தொங்கிய நிலையில் உள்ளது. அதிக காற்று அல்லது பலத்த மழையின்போது இம்மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயச் சூழல் உள்ளது.
இதனால் இம்மின்கம்பத்தை ஒட்டியுள்ள நிலங்களில் தற்போது உளுந்து,பாசிப்பயறு ஆகியன சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நாள்தோறும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வரவேண்டிய நிலையில், சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து நேருமோ என அஞ்சியபடியே தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.
எனவே, இம்மின்கம்பத்தைச் சீரமைக்க மின்வாரியத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் தற்போதுவரை பலனில்லையெனக் கூறப்படுகிறது. ஆகவே, விவசாயிகள் நலன் கருதியாவது, மின்கம்பத்தை விரைவில் சீரமைக்க, அவர்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.