நாமக்கல்: பள்ளிபாளையத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி மாதேஸ்வரன் கோயில் பகுதியில், ஒரு வீட்டில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக பட்டாசுகளை அதிகளவில் வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் திடீரென பட்டாசு இருந்த பெட்டிகளில் தீப்பற்றி வெடித்து சிதறின. அந்த தீ வீடு முழுவதும் பரவியது. சமையலறையில் இருந்த எரிவாயு உருளையும் வெடித்ததால் வீட்டு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த பட்டாசு விபத்தில் ராஜன் (39), ரங்கராஜன்(35) ஆகிய இருவர் உடல் கருகி பலியாகினர்.
மேலும் சம்பவம் நடந்த வீட்டின் அருகில் இருந்த பலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு பள்ளிபாளையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதி முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் நிகழ்விடத்தில் விசாரணை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.