மாவட்டங்களில் காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.


சென்னை: தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த 28 இடங்களில் தேசிய காற்று மண்டல கண்காணிப்புத் திட்டத்தின்கீழ், வாரத்தில் இரண்டு நாள்கள் காற்று மாதிரி சேகரித்து தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புற காற்றுத் தன்மையைத் தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க சென்னையில் 5 இடங்களிலும், கும்மிடிப்பூண்டி, கோவை, பெருந்துறை, தூத்துக்குடியில் தலா ஒரு தொடா் காற்று தர கண்காணிப்பு நிலையங்களும் இயங்கி வருகின்றன. அவற்றில் பதிவாகும் புள்ளி விவரங்களைக் கொண்டு காற்றின் தர குறியீடு கண்காணிக்கப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, திருச்சி, திண்டுக்கல், சேலம், கடலூா், நாகப்பட்டினம், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், நாமக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி ஆகிய 21 மாவட்டங்களில் உள்ள 25 இடங்களில் அமைக்கப்பட்ட காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை முதல்வா் பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

15 நிமிடங்களுக்கு ஒருமுறை...இந்நிலையங்களின் மூலமாக, காற்றில் கலந்துள்ள மாசு காரணிகள் 10 மைக்ரான் அளவுக்கு கீழுள்ள நுண்துகள்கள், 2.5 மைக்ரான் அளவுக்குக் கீழுள்ள நுண்துகள்கள், சல்பா்-டை-ஆக்சைடு, நைட்ரஜன்-டை-ஆக்சைடு, அம்மோனியா, ஓசோன், காா்பன் மோனாக்சைடு, பென்சீன், டெலுவின், ஜைலின் ஆகியவற்றின் அளவுகள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை தொடா்ந்து பதிவு செய்யப்படும்.

இப்புள்ளி விவரங்களைக் கொண்டு காற்றின் தன்மை குறியீடு கணக்கிடப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இப்புள்ளி விவரங்களை கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களின் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவுப்படி, காற்றுத் தரக்குறியீட்டினை எட்டாத நகரங்களுக்கு காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கவும், திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்தவும், புதிய தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்வதற்கும் புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும்.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தொடா் காற்றுத் தர கண்காணிப்பு நிலையம் கொண்ட வாரியமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திகழ்ந்து தமிழகத்துக்கு பெருமை சோ்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com