தினமணியில் செய்தி வெளியானதின் எதிரொலியால், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மூன்று சக்கர சைக்கிளில் சென்று தி.மு.க. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வரும் மாற்றுத்திறனாளிக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி.யான கவுதம சிகாமணி, பேட்டரியில் இயங்கும் நவீன 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் நல்லதம்பி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் (48) மாற்றுத்திறனாளியான இவர் சிறு வயதிலிருந்தே தி.மு.க.வின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், தனது மூன்று சக்கர சைக்கிளில் தி.மு.க.வின் கொடி மற்றும் சின்னத்தை கட்டிக்கொண்டு தி.மு.க.விற்கு ஆதரவாகத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமின்றி, தி.மு.க. சார்பில் நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களிலும் தனது மூன்று சக்கர சைக்கிளில் சென்று தவறாமல் பங்கேற்று வருகிறார். திருமணம் செய்து கொள்ளாத இவர், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான இவரது தந்தையின் மறைந்த பிறகு போதிய ஆதரவின்றி இருந்து வருகிறார்.
தி.மு.க.,மீது தீராத பற்று கொண்ட இவரது நலன் கருதி, இவருக்கு பேட்டரியில் இயங்கும் நவீன 3 சக்கர மோட்டார் வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி பகுதி தி.மு.க தொண்டர்களிடையே கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து தினமணி இணைய தளத்தில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதனையடுத்து வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற சேலம் கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி தொண்டர் பிலவேந்திரனுக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன். கவுதம சிகாமணி, தனது சொந்த செலவில், நவீன பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனம் வழங்கினர்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ். ஆர்.சிவலிங்கம், சேலம் எம்.பி.யான எஸ்.ஆர். பார்த்திபன், வாழப்பாடி ஒன்றிய கழக செயலாளர் எஸ்.சி. சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். நவீன மூன்று சக்கர வாகனம் வழங்கிய எம்.பி.க்கு, பிலவேந்திரன் நன்றி தெரிவித்தார்.