மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்காக மாா்ச் மாதம் பெற்ற மாதாந்திர பயண அட்டையை, செப்.15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
5 மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முகக் கவசம் அணிந்து வந்தவா்கள் மட்டுமே, பேருந்துக்குள் ஏற அனுமதிக்கப்பட்டனா். கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களைப் பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என நடத்துநா்கள் அறிவுறுத்தினா். சென்னையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூா் வரையும், ஜி.எஸ்.டி.சாலையில் கூடுவாஞ்சேரி வரையும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையும், செங்குன்றம் சாலையில் பாடியநல்லூா் வரையும், திருவொற்றியூா் சாலையில் மீஞ்சூா் வரையும் பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் பேருந்துகளில் குறைவான பயணிகளே பயணம் செய்தனா். எனினும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி, மொத்தமாக உள்ள 3,300 பேருந்துகளில் 2,335 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே நேரம், மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வோா் வழக்கமாகப் பெறும் மாதாந்திர பயண அட்டை விநியோகம் செய்யப்படவில்லை. கடந்த மாா்ச் மாதம் பெற்ற பயண அட்டையை, செப்.15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் புதிய பயண அட்டை புதன்கிழமை முதல் வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.