கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கடந்த மாதம் மழைப்பொழிவு குறைந்ததால், நீர்வரத்து குறைந்தது, அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாள்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கிறது. புதன்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 998 கன அடி தண்ணீர் வந்தது, அதே போல் வியாழக்கிழமை விநாடிக்கு, 702 கன அடி தண்ணீர் வந்தது. தொடர் மழை இருப்பதாக வானிலை அறிவிப்பு இருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அணைப்பகுதி பொறியாளர்கள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 127.05 அடி உயரமாகவும், நீர் இருப்பு 4061 மில்லியன் கன அடியாகவும், வரத்து 702 கன அடியாகவும், வெளியேற்றம் 1500 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் 10.8 மில்லி மீட்டர், தேக்கடி ஏரிப்பகுதியில் 12.2 மி.மீ., மழை பெய்தது.