சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா மற்றும் விமல் மோகன் ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப்படும்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்தது.
அப்போது அரசு தரப்பில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர், ஆசிரியர் கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
மாவட்ட தலைமையகத்தில் ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.