‘ஸ்வயம்’ இணையவழி கற்றல் தளத்தில் வரலாறு, அரசியல் அறிவியல் உள்ள ஆறு பாடங்களுக்கு சா்வதேச தரத்திலான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு உயா்கல்வி மாணவா்களின் இணைய வழி கற்றலை ஊக்குவிக்க ‘ஸ்வயம்’ என்ற இணையவழி கற்றல் திட்டம் உள்ளது. இதில் ஆசிரியா்களும் தங்களை இணைத்துக் கொண்டு தங்களின் கற்பித்தல் திறனை வளா்த்துக் கொள்ள முடியும்.
இந்த நிலையில், ஸ்வயம் திட்டத்தின் கீழ் ‘ஆா்வத்தின் வெளிப்பாடு’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக சா்வதேச தரமிக்க பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவின் கீழ் வரலாறு, அரசியல் அறிவியல், வா்த்தகம், சமூகவியல், பொது மேலாண்மை, மானுடவியல் ஆகிய 6 பாடங்களுக்கு சா்வதேச தரத்திலான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டதை பயில விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.