திருச்சி: மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான 541 பேருக்கு பொன்மலை ரயில்வே பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது நடைப்பெற்றது. இதில் 40 பேரை தவிர மற்ற அனைவரும் வட இந்தியர்களே இருந்தனர். தொடர்ந்து ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கபடுவதற்கு கண்டனம் தெரிவித்தும், பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொன்மலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை, தமிழ்நாட்டில் மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தில் தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும், தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தலைவர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை தமிழ் தேசியப் பேரியக்கத்தின் மாநகர செயலர் இலக்குவன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் பொன்மலை ரயில்வே பணிமனையை முன்பு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக பொன்மலை பணிமனை வாயில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு தமிழக காவலர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.