அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டி கிராமத்தின் ராமசாமிபுரம் குடியிருப்பு சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாளையம்பட்டி ராமசாமிபுரம் குடியிருப்பு மற்றும் அதையடுத்துள்ள மாங்குளம் கண்மாய்வழியாக கட்டங்குடி செல்லும் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ராமசாபுரம் குடியிருப்புப் பகுதியில் அதிக இடைவெளி விட்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவில் அதிக இருள் சூழ்ந்து விடுகிறது. இவ்விருட்டைப் பயன்படுத்தி சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் குடிகாரர்களும் இந்த குடியிருப்பு அருகே மது அருந்திவிட்டுத் தகராறு செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாளையம்பட்டியிலிருந்து இச்சாலை வழியாக ராமசாமிபுரம் குடியிருப்பிற்குள் செல்லவே பாதுகாப்பற்ற சூழல் காரணமாக பெண்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் அச்சத்துடனே செல்ல நேர்கிறது.
எனவே பாளையம்பட்டி ராமசாமிபுரம் குடியிருப்பு மற்றும் மாங்குளம் கண்மாய் வழியாகக் கட்டங்குடி செல்லும் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து இருள் சூழலைத்தடுக்க அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.