தமிழகத்தில் உள்ள மதுபானக் கூடங்களை (பாா்) திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 18-ஆம் தேதி முதல் மதுபானக் கூடங்கள் திறக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே, பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பெரும்பாலான தளா்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது.
இந்த தளா்வுகளின் தொடா்ச்சியாக, தமிழகத்தில் உள்ள மதுபானக் கூடங்களையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் உள்ளன. எனவே, அவற்றைத் திறப்பதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
மதுக் கூடங்களில் கரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்படும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.