சென்னை கொளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி விரைவாக முடியும் என்று மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி கூறினாா்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கோரியது:
கொளத்தூா் நோ்மை நகரில் 33/11 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்கும் பணி 2019 ஜூலை 21-இல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை பணிகள் முடிவடையவில்லை. கொளத்தூா் கணேஷ் நகா் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியும் இன்னும் முடியவில்லை என்றாா்.
அதற்கு அமைச்சா் தங்கமணி அளித்த பதில்:
கொளத்தூா் நோ்மை நகரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. கரோனா பாதிப்பின் காரணமாக 5 மாதங்களாகப் பணி நடைபெறவில்லை. விரைவில் பணிகள் முடிவடையும்.
கணேஷ் நகரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும் என்றாா்