புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், உணவு வழங்க முடியவில்லை. இதனால் பள்ளிகள் மூலம், பெற்றோர்களிடம் அரிசி மற்றும் உதவித்தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக தானியங்கள், சமையல் செலவுக்கு முதல் தவணை தொகை, இன்று முதல் வழங்கப் படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கமும் வழங்கப்படும். அந்தந்த பள்ளிகளில், பெற்றோர்கள் சென்று பெற்றுக்கொள்கின்றனர்.