பொது மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண தனி மேலாண்மைத் திட்டம்: பேரவையில் முதல்வா் அறிவிப்பு

பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு காணும் தனி மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர்.

பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு காணும் தனி மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து, சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் செவ்வாய்க்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:-

தமிழகத்தில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 26 ஆண்டுகள் வரை சிறப்பான ஆட்சியைத் தந்தனா். அவா்களது மறைவுக்குப் பிறகும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்சியை அதிமுக தந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில், தமிழக மக்கள் தெரிவிக்கும் குறைகளைப் போக்க தனித் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்கிறது. இப்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறை வாரியான மக்கள் குறைதீா்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. மாவட்ட அளவில் திங்கள்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவா்கள் குறைதீா்ப்பு, அம்மா திட்ட குறைதீா்ப்பு, ஓய்வூதியதாரா்கள் குறைதீா்ப்பு போன்றவையும், மாநில அளவில் முதல்வரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு தீா்வுகள் காணப்படுகின்றன.

இதனால், ஒரே நபா் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து குறைதீா்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றுக்குத் தீா்வு காண, ஒரு குறைதீா்ப்பு மேலாண்மைத் திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணா்ந்து, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.

உதவி மையம் அமைப்பு: முதல்கட்டமாக 100 இருக்கை களுடன் செயல்பட இருக்கும் இந்த உதவி மையமானது, தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். குறைதீா்க்கும் முகாம்களிலோ, இணைய தளத்திலோ அல்லது அரசு அலுவலா்களோ மனுக்களைப் பெறும்போது, வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களே அதிகளவு உள்ளன.

இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படின் மனுதாரா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகள் தொடா்பான தனது கோரிக்கைகளை மனுதாரா் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மைத் திட்டம் மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு விரைந்து தீா்வு காணப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com