சென்னை: விழுப்புரத்தில் அரசு அமைக்க உத்தேசித்துள்ள புதிய பல்கலைக்கழகத்திற்கு ஏ.கோவிந்தசாமி பெயரைச் சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு புதிய பல்கலைக்கழகம் வழிவகுக்கும்!
விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கு மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், பேரறிஞர் அண்ணாவின் நண்பருமான ஏ.கோவிந்தசாமியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், ‘பெண்களை பின்தொடர்வோருக்கான தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவியாக இருக்கும்!’ என்று தெரிவித்துள்ளார்.