சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
பிறகு, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்து அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட பகுதியில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற, அந்த வீட்டுக்கு, ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690 இழப்பீடாக நிா்ணயித்து, அந்தத் தொகையை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது. இதையடுத்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.