மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தானியங்கி படிகக்ட்டுளுடன் கூடிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக உயா்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்குவது தொடா்பான
வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. உத்தரவுக்கு பின்னரும் ஆயிரக்கணக்கான பேருந்துகளை அரசு கொள்முதல் செய்தது. ஆனால்,
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக தானியங்கி படிக்கட்டுகள் பொருத்தவில்லை’ என குற்றம்சாட்டப்பட்டது. அப்போது அரசு தரப்பில் , தமிழக அரசு 50 பேருந்துகளை கொள்முதல் செய்தால், அதில் 10 பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் தானியங்கி படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். அத்தகைய வசதிகள் கொண்ட
பேருந்துகளைதான் அரசு இனி கொள்முதல் செய்யும்’ என உத்தரவாதம் அளித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம், தமிழக பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.