சென்னை: அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்திடமிருந்து எந்தக் கடிதமும் அரசுக்கு வரவில்லை என்றும், அரியர் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சட்டப்பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி பேசும்போது, "பொறியியல் படிப்பில் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் அந்தத் தேர்ச்சி செல்லாது என்று கூறியிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன' என்றார். அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது: இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர, பிற பருவக் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதிவதில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழு விதிகளைப் பின்பற்றியே அறிவிக்கப்பட்டதாகும். இதில், எந்தவித பாகுபாடோ, உள்நோக்கமோ இல்லாமல் மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கரோனாவிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவரிடமிருந்து அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. தனிப்பட்ட முறையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சொந்த மின்னஞ்சலில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மின்னஞ்சலில் இருந்து கடிதம் எழுதவில்லை. அதற்கு தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். அது அரசின் பார்வைக்கு வரவில்லை. அதனால், அதைப் பற்றி மாணவர்கள் சமுதாயம் யாரும் பயப்பட அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.