மகாளய அமாவாசை நாளான வியாழக்கிழமை பக்தர்கள் கூட்டமின்றி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்துக்களின் முக்கிய தினங்களுள் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இறந்த முன்னோர்களுக்கு கடல், நதி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கமானது. ஆனால், கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கடல் பகுதியில் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனிதநீராட வந்த பக்தர்கள் காவல் நிலையம் அருகே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும், முக்கடல் சங்கமம் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்றி அப்பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.