ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று இரண்டாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
ஈரோடு கோட்டத்தில் பணிபுரியும் விஏஓ.,க்களுக்கு நடப்பாண்டு பணியிட மாறுதல் வழங்கக் கோரி கடந்த மாதம் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் சைபுதீன், பொதுப் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் செப்.,மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி கலந்தாய்வு நடத்தவில்லை. அதற்கு உண்டான எவ்வித சாத்தியக்கூறுகளும் தெரியவில்லை. இதனால், விஏஓ.,க்களுக்கான பொதுப்பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும், என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் இன்று முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மண்டல தலைவர் தலைவர் கந்தசாமி தலைமை நடைபெற்றது. இந்த இரு போராட்டத்தில், ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளின் விஏஓ.,க்கள் பலர் கலந்துகொண்டனர்.