சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே அரசு பேருந்தும், மீன் ஏற்றி வந்த மினி லாரியும் வியாழக்கிழமை அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 20 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை இரவு அரசு போக்குவரத்துக்கழக (எஸ்இடிசி) சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை நோக்கிச் சென்ற பேருந்து எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த மீன் லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், பேருந்தை ஓட்டி வந்த திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(42) மற்றும் பேருந்தில் பயணம் செய்த தரங்கம்பாடி நல்லோடை பகுதியைச் சேர்ந்த அன்பரசன்(34), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வைரவன் (20) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே அரசு பேருந்தும், மீன் ஏற்றி வந்த மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்கள்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த 20 பயணிகளில் 16 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.