மதுரையில் எய்மஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஜப்பான் கடன் உதவி நிறுவனமான ஜெய்கா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு -காஷ்மீா், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-இல் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-இல் அடிக்கல் நாட்டப்பட்டது.
இருப்பினும் இதுவரை அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டிமுடிக்கக்கோரி 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடா்ந்தபோது, கட்டுமானப்பணி விரைவில் தொடங்கப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை சுற்றுச்சுவா் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் ஜப்பான் கடன் உதவி நிறுவனமான ஜெய்காவுடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த திட்டத்தின் நிலைமையை அறிவும் போது தெரியவந்துள்ளது.
பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர்தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எப்பொழுது இறுதிக்கட்ட கையெழுத்தாகும், திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ. 2,000 கோடியாக அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன, ரூ.736 கோடிக்கான திட்ட மதிப்பீடு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கையெழுத்தாகியுள்ளது, கடன்தொகை பெறப்பட்ட பின்னர் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதன் முழு விவரங்களும் தெரிவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களிடையே எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அச்சம் விலகி நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.