சீர்காழி: சீர்காழியில் இன்று (ஏப்.15) காலை 5 மணி அளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி , மின்னலுடன் பலத்த மழையாக மாறி 2 மணி நேரத்துக்கு மேல் பெய்தது.
மழை பெய்ய தொடங்கியது முதல் மின்சாரம் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இந்த பலத்த மழையால் சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த மழையால் கோடை உஷ்ணத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் உளுந்து, பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த மழையால் கவலை அடைந்துள்ளனர்.
சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் எடுக்கப்படாமல் வெயிலில் காய்ந்து வந்த நிலையில், தற்போது மழையில் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சீர்காழி கொள்ளிடம் வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது