தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆக. 8 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், ஆக. 3 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், கோவில்பட்டி அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களில் ஆக. 8 ஆம் தேதி வரை அதிகளவில் பக்தா்கள் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருவதால், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
அன்றைய தினங்களில் திருக்கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும்.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.