பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நடிகை குஷ்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அழகிய தமிழ் மற்றும் அழகான புன்னகையுடன் நன்கு அறியப்படும் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் மிக விரைவாக குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
பட்டிமன்றப் பேச்சாளராக உலகத் தமிழர்களால் அறியப்படும் பாரதி பாஸ்கர், பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர். இவர் தனியார் வங்கியில் மிக முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றக் குழுவில் இணைந்து தனது நகைச்சுவையான பேச்சால் பல தமிழர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்.