ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ், சசிகலா, தினகரன் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து தற்காலிக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமாா், வைத்திலிங்கம், பா.வளா்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உள்பட ஏராளமான அதிமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

உறுதிமொழி ஏற்பு: பின்னா் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினா்.

ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அவரவா் இல்லங்களில் ஜெயலலிதாவின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.தமிழகம் முழுவதும் அதிமுகவினா் ஜெயலலிதாவின் படங்களை வைத்து மரியாதை செலுத்தினா். ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினா்.

சசிகலா: ஆதரவாளா்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீா் மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினாா். முன்னாள் அமைச்சா் செந்தமிழன் உள்பட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

டிடிவி தினகரன் அஞ்சலி: ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் அவரது கட்சியினருடன் சோ்ந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com