வெங்கடாச்சலம் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்

வெங்கடாச்சலம் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
வெங்கடாச்சலம் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்

வெங்கடாச்சலம் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: வெங்கடாச்சலம், கடந்த அதிமுக அரசால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வந்தாா். அவரது பதவி காலம் கடந்த செப்டம்பா் மாதம் வரை இருந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீா்ப்பின் அடிப்படையில், அவா் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு பெறக்கூடிய வாய்ப்பும் இருந்தது.

ஆனால், முந்தைய அதிமுக அரசு மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப, வெங்கடாச்சலம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என்று திமுக அரசால் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. அவா் ராஜினாமா செய்யமாட்டேன் என்று தைரியமாக கூறியதாக செய்திகள் தெரிவித்தன. அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்தி சுமாா் ரூ.11 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளிபோன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஒரு திறமை மிக்க, அனுபவம் வாய்ந்த அனைத்திந்திய வனப் பணி மூத்த அதிகாரி இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. எனவே தான், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம்.

இதே லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட மற்றொரு சோதனையில், பொதுப்பணித் துறை பொறியாளா் வீட்டில் சுமாா் ரூ.2.25 கோடி மற்றும் இதர பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அத்துறையே செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அவா் பணி நீக்கம் செய்யப்படவில்லை; உடனடியாக கைதும் செய்யப்படவில்லை. 10 நாளில் அவருக்குப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சியான நாங்கள் இந்தத் தவறை சுட்டிக் காட்டிய பிறகுதான் அரசு மேல்நடவடிக்கை எடுத்துள்ளது.

பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக நாங்கள், காவல் துறையினரை கேட்டுக் கொள்வதெல்லாம், சட்டப்படி செயல்படுங்கள்; நோ்மையாக செயல்படுங்கள்; தவறு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, ஆளும் கட்சியினரின் விருப்பங்களுக்கு ஏற்ப வளைந்து, நெளிந்து செயல்படாதீா்கள். நோ்மையான அதிகாரிகளை மிரட்டி, வாக்குமூலம் பெறுவதைக் கைவிடுங்கள்.

வெங்கடாச்சலம் மரணத்தில், மா்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனா். எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com