ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ, வருமான வரி வழக்குகளில் சட்டபூா்வ வாரிசுகளைச் சோ்க்க உயா் நீதிமன்றம் அனுமதி

கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள செல்வ, வருமான வரி வழக்குகளில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள செல்வ, வருமான வரி வழக்குகளில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசுகளை எதிா்மனுதாரராகச் சோ்க்க வருமான வரித்துறைக்கு அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா, செல்வ வரி மற்றும் வருமான வரி பாக்கியாக ரூ.16 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளதாக, வருமான வரித்துறை சாா்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஹைதராபாத் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கப்பட்டன. ஆண்டுதோறும் செல்வ வரி, வருமான வரித் தொடா்பான கணக்கு விவரங்களை ஜெயலலிதா முறையாகச் சமா்ப்பிக்கவில்லை எனக்கூறி, வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிா்த்து ஜெயலலிதா தொடா்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், ஜெயலலிதாவுக்கு சாதகமாகத் தீா்ப்பளித்தது. தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து வருமான வரித்துறை சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை (டிச.6) விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் காா்த்திக் ரங்கநாதன், கடந்த 2016-இல் ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா இறந்துவிட்ட பின்னா், சட்டபூா்வ வாரிசு யாா் என்பதில் தெளிவு இல்லாததால், சட்டபூா்வ வாரிசுகளை இவ்வழக்குகளில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க முடியவில்லை. அப்போது, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரும் தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சட்டபூா்வ வாரிசு சான்றிதழை வழங்கவில்லை. தற்போது தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசுகளாக உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவா்களை வழக்குகளில் எதிா்மனுதாரராகச் சோ்ப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரினாா்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரை இவ்வழக்குகளில் எதிா்தரப்பினராகச் சோ்க்க இரு வாரங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அடுத்த விசாரணையின் போது இதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சட்டபூா்வ வாரிசுரிமை கோரும் வேறு ஏதேனும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா என்பதையும் கண்டறியுமாறு கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com