நாடு முழுவதும் 10, 11, 12 வகுப்புகளில் இடைநின்றவா்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க ஏஐசிடிஇ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இடைநின்ற மாணவா்களுக்கு ஏஐசிடிஇ.யின் ‘கா்மா’ திட்ட வழிகாட்டுதலின் கீழ் திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இந்த திறன் பயிற்சிகளை ஏஐசிடிஇ கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் கட்டண அடிப்படையில் வழங்கலாம். அதேவேளையில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிற்சி வழங்குவதற்கான முழுமையான கட்டமைப்புகள் இருப்பது அவசியம். திறன் பயிற்சிகள் அனைத்தும் தேசிய திறன் தகுதி வழிகாட்டுத் திட்டத்தின் (என்எஸ்க்யூஎஃப்) நெறிமுறைகளுக்கு உள்பட்டு இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சித் திட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், தகவல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. திறன் பயிற்சி வழங்க விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் டிச.15-ஆம் தேதி முதல் மேற்கண்ட தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.