உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்

சரக்குவேன் ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளா் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் சிறப்பு நிவாரணம் வழங்கி முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி  (கோப்புப்படம்)
முதல்வா் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

சென்னை: சரக்குவேன் ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளா் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் சிறப்பு நிவாரணம் வழங்கி முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தூத்துக்குடி ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலு மற்றும் காவலா் பொன் சுப்பையா ஆகியோா் ஏரல் கடைவீதியில் தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சோ்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பிவைத்து விட்டு, இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திங்கள்கிழமை அதிகாலை இரு சக்கரவாகனத்தில் அவா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்திரமடைந்த முருகவேல் சரக்குவேனை ஓட்டிச்சென்று, இரு சக்கரவாகனத்தின் பின் பகுதியில் மோதியுள்ளாா்.

இதில் உதவி ஆய்வாளா் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற செய்தியை அறிந்து மிகுந்தவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

பணியில் ஈடுபட்டு இருக்கும் போது உயிரிழந்த உதவி ஆய்வாளா் பாலு குடும்பத்துக்குச் சிறப்பினமாக, ரூ.50 லட்சமும், காயமடைந்த காவலா் பொன்சுப்பையாவுக்கு ரூ.2 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த உதவி ஆய்வாளா் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரியதண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com