தச தீர்த்தம் உற்சவம் பிரதி வருடம் தை அமாவாசையன்று சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தில்லை சிதம்பரம் அன்னை சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு ஆனந்த நடராஜ மூர்த்திக்கு தை அமாவாசை தச தீர்த்த உற்சவம் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
கோயில் என்றால் அது சிதம்பரமே. தில்லை என்றாலே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் குறிக்கும்.
தில்லை தலத்தில் இருக்கும் பத்து (தச) தீர்த்தங்கள்
சிவகங்கை (கோயிலினுள்)
முதல் தீர்த்தமான சிவகங்கை -எல்லா தீர்த்தத்தையும் காட்டிலும் மிகவும் சிறந்தது. கங்கையின் புனிதத்தைப் போற்றும் இந்த தீர்த்தம் தொழுநோயை போக்கவல்லது.
குய்ய தீர்த்தம் (கிள்ளை கடற்கரை)
2-வதாக குய்ய தீர்த்தம் - அனைத்து தேவர்களாலும் சேவிக்கப்பட்டது. சகல பாபங்களையும் போக்கவல்லது.
புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை)
3-வது தீர்த்தம் வியாக்ர தீர்த்தம் (புலிமேடு) - பிறப்பு இறப்பு நூத்தி முதலிய சகல வல்லமை படைத்த தீர்த்தம்.
வியாக்ரபாத தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில்)
4வது தீர்த்தம் யௌவனேஷ்வர தீர்த்தம் - ஆத்மாவின் பாபங்களைத் தீர்க்கும் பக்தர்கள் இளமையான சரீரத்துடன் வாழ அருளும். தம்பதிகள் ஒற்றுமையை உண்டாக்கும்.
அனந்த தீர்த்தம் (அனந்தீச்வரன் கோயில்)
5வது அனந்தீஸ்வரர் தீர்த்தம் - ஸ்ரீ அனந்தீஸ்வரர் கோயில் பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு ஸ்நானம் செய்தால் நாகதோஷம் விலகும், புத்திரசந்தானம் கிடைக்கும்.
நாகசேரி தீர்த்தம்
6 வது நாகசேரி தீர்த்தம் - இது அனந்தீஸ்வரர் கோயில் பின்புறம் உள்ளது. இந்த தீர்த்தம் சப்த கன்னிகளின் பாபங்களையும் நாக தோஷத்தையும் போக்கவல்லது.
பிரம்ம தீர்த்தம் (சிங்காரத்தோப்பு)
7வது பிரம்மதீர்த்தம் - இது பிரம்மஹத்தி தோஷம் மற்றும் மாதா பிதா குரு பாபங்களை போக்கவல்லது.
சிவப்ரியா தீர்த்தம் (தில்லையம்மன் கோயில்)
8வது சிவப்பிரியா தீர்த்தம் - இது பெண் சாபம் துஷ்ட சத்துரு சாபங்களை போக்கவல்லது.
திருப்பாற்கடல் (பர்ணசாலை)
9வது அமுத தீர்த்தம் திருப்பாற்கடல் - இது ஞானத்தையும் வித்தையையும் கொடுக்கவல்லது.
பரமானந்த கூபம் (ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு)
10வது பரமானந்த கூபம் - இது அனைவருக்கும் சகல துக்கங்களையும் போக்கி சகல செல்வங்களையும் கொடுக்கவல்லது.
தச தீர்த்தங்களிலும் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த தச தீர்த்தத்தில் ஸ்நானங்கள் செய்து இகபர சௌக்கியங்களை அடைந்து எல்லாம்வல்ல அன்னை சிவகாமசுந்தரி உடனமர் அருள்மிகு ஆனந்த நடராஜ மூர்த்தியின் அனுக்கிரகத்தைப் பெறவும்.