மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கனரா வங்கி சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வங்கியின் கிளை மேலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கனரா வங்கி துணைப் பொதுமேலாளர் ஜெயகுமார் விழாவில் கலந்துகொண்டு மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு பயிர் கடன், தனிநபர் கடன் என ரூ.5 கோடிக்கு பலவகை கடன்களை வழங்கிப் பேசுகையில், மானாமதுரை கனரா வங்கி கிளையில் கடன் பெற்ற 90 சதவீத மகளிர் குழக்களைச் சேர்ந்தவர்கள் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கி வருகிறோம்.
கனரா வங்கியின் மூலம் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தையும் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கியில் பெறும் கடன்களை முறையாகச் செலுத்தி சிறப்பு பெற்றால் மீண்டும் வங்கி அவர்களுக்கு கடன் வழங்குவதில் அக்கறை காட்டும் என்றார்.
கிளை மேலாளர் ராஜ்குமார் கூறுகையில், மானாமதுரை கனரா வங்கி கிளை சார்பில் இப்பகுதியில் 800 மகளிர் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.25 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த கடன்களை குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஒழுங்காக திருப்பிச் செலுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
விழாவில் செர்டு தொண்டு நிறுவன இயக்குனர் எல்.பாண்டி, ஒருங்கிணைப்பாளர் போதும் பொண்ணு, பிரஸ் தொண்டு நிறுவன இயக்குநர் முத்துராமலிங்கம், மாருதி தொண்டு நிறுவன இயக்குநர் சோமன், வங்கி கிளை மேலாளர் கோகிலா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.