களக்காடு சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நாளை தொடக்கம்
களக்காடு சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) தொடங்கி 1 வாரம் நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இப்பணிகள் பிப்.21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 1 வாரம் நடைபெறுகிறது.
இதையொட்டி களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதையாறு வனச்சரகங்களில் உள்ள வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர், வனச்சரகர், வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் களக்காடு தலையணையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தனித்தனி குழுக்களாகச் சென்று கணக்கெடுப்புப் பணியினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஆண்டு தோறும் கணக்கெடுப்புப் பணியில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ,மாணவியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை பங்கேற்குமாறு வனத்துறை சார்பில் 15 தினங்களுக்கு முன்பு பத்திரிகை செய்தி வாயிலாக வனத்துறை சார்பில் செய்தி வெளியிடப்படும்.
ஆனால் இந்த முறை ரகசியமாக இந்த கணக்கெடுப்புப் பணிகள் குறித்த தகவல் முன்கூட்டியே வெளியிடப்படாததால் வன ஆர்வலர்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் உலா வரும் புலி (கோப்பு படம்)