சென்னை: சீமான், சரத்குமார் விரும்பினால் எங்கள் அணிக்கு வரலாம் என்று மநீம தலைவர் கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகின்றன.
அந்த வரிசையில் சனிக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மநீம தலைவர் கமல் திடீரென்று சந்தித்துப் பேசினார். பின்னர் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தலைவர்’ என சொல்லும் நபர் இன்னும் நாள் தவறாது அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வாய்ப்பு இருக்கிறது, என் பின்னால் வாருங்கள் என்று சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம்’ என்று
முன்னதாக மறைமுகமாக ரஜினியைக் குறிப்பிட்டு கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சீமான், சரத்குமார் விரும்பினால் எங்கள் அணிக்கு வரலாம் என்று மநீம தலைவர் கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் கூறுகையில், ‘ மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் யாரும் எங்களுடன் வரலாம்; அதன்படி சீமான், சரத்குமார் விரும்பினால் எங்கள் அணிக்கு வரலாம். நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். திமுக, அதிமுக என்னிடம் நேரடியாகப் பேசவில்லை; தூது விட்டதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது’ என்றும் அவர் பேசியுள்ளார்.