புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு திங்களன்று காலை அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்த நிலையில், நேற்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான லட்சுமி நாராயணன் திடீரென்று பதவியை ராஜிநாமா செய்தார். இதன்காரணமாக ஏற்கனவே அபாயத்தில் இருந்த நாராயணசாமியின் அரசு கவிழ்வது உறுதியானது. பின்னர் திங்கள் காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று, நாராயணசாமி தனது பதவியினை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் கூறுகையில், ‘கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.