மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் நாகை மற்றும் நாகூரில் கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி, வி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஆசைமணி, அதிமுக நகரச் செயலாளர் தங்க. கதிரவன், திருமருகல் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம், நாம்கோ தொண்டு நிறுவன இல்லம் மற்றும் நம்பிக்கை இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள குழந்தைகள், முதியோர்களுக்கு காலை உணவு, மதிய உணவுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் நாகை நகர மகளிரணி, அம்மா பேரவை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, மீனவர் பிரிவு, அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு, எஸ்.இ.டி.சி அண்ணா தொழிற்சங்கம் ஆகியன செய்திருந்தன.
நாகூர் தர்காவில் அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், நாகூர் நகர அதிமுக செயலாளர் செய்யது மீரான் சாகிபு மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.