கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், மாலுரிலிருந்து காரில் மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். காரை மாலுரை சேர்ந்த நாகேஷ் (35)என்பவர் ஓட்டினார். கார் கிருஷ்ணகிரியை கடந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஓரப்பம் காமராஜ் காலனியைச் சேர்ந்தகம்பி கட்டும் தொழிலாளி முருகன் (27), நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகனின் அண்ணன் மகன் சக்தி (15) பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.