நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்தநிலையில் என்.எல்.சி. நிறுவனம் கருணை அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அனைத்தும் 2005-இல் முடித்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் என்எல்சி நிறுவனத்தில் வேலைக்காக காத்திருந்தனர். இதுநாள் வரையும் அவர்களுக்கு என்எல்சி நிர்வாகம் வேலை வழங்கவில்லை.
இதனைக் கண்டித்து என்.எல்.சி. நிறுவன தலைமை அலுவலகம் முன்பு திங்கள்கிழமை குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டம் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறினர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்த இடத்திற்கு வந்த துணை பொது மேலாளர் (தொழில் உறவு) சிவராஜ்ஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்துச் சென்றனர்.